தீயவர்களின் வீழ்ச்சி மகிழ்வை கொடுக்கும்; பாதிப்பை ஏற்படுத்தாது. நல்லவர்களின் வீழ்ச்சி துயரத்தோடு நிற்காது; பெரும்பாதிப்பை உருவாக்கும்.
ஆசையின் வழியே பயணப்படக் கூடாது. அறிதலின் வழிதான் பயணப்பட வேண்டும். இயற்கை ஆசைக்கான பொருளன்று.
இயல்பாய் அமைவதைக்கூட இயல்பானதென ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தோடு இயங்கும் ஆற்றல் காலத்திற்கு உண்டு.
கதைகள்தான் நல்லவர்களின் கடைசி நம்பிக்கை. பறவைகள், விலங்குகள், மரம், செடி, கொடியென இயற்கை எல்லாம் நமக்கு துணை நிற்க, அழித்தொழிப்பவர்கள் வீழ்வார்கள்; அழிக்கப்பட்டவர்கள் எழுவார்கள் என்ற நம்பிக்கையை கதையன்றி வேறு யார் கொடுப்பது?